சங்கு-சக்கரத்துடன் கருடாழ்வார்

ஆன்மிக தகவல்கள்


தேவர்களுக்கு சிற்பியாக விசுவகர்மா விளங்குகிறார். இவர்தான் எண்ணற்ற திவ்யதேச கோவில்களை கட்டியுள்ளார். அசுரர்களின் சிற்பிதான் மயன். இவர் விசுவகர்மாவுக்கு கிடைக்கும் பாக்கியம் தனக்கும் கிடைக்க வேண்டி கும்பகோணம் அருகே திருவெள்ளியங்குடி வந்து பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு விஷ்ணு சங்கு-சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். அப்போது மயன் இந்த கோலம் வேண்டாம் என்றும் ராமாவதாரக் கோலத்தில்தான் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டினார். உடனே பெருமாள் தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை அருகில் இருந்த கருடனிடம் கொடுத்துவிட்டு, வில்-அம்புகளுடன் காட்சி கொடுத்தார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு கோலவல்லி ராமன் என்று பெயர். எல்லாக் கோவில்களிலும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய வண்ணம் இருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் கருடாழ்வார் பெருமாள் கொடுத்த சக்கு-சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார். இந்த கருடாழ்வாருக்கு 4 கரங்கள் உள்ளன. இந்த விசேஷ அம்சம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. இந்த கருடாழ்வாரிடம் பெருமாளின் சக்தி இருப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள். -ஆ.பாலன்