15-9-2019
சீதையை சிறைபிடித்த ராவணனுடன் போரிட ராமரின் படைகள் போரிட்ட காலம் அது. ராமரையும், லட்சுமணனையும் தன்னால் வெற்றி கொள்ளமுடியாது என்பதை ராவணனின் மகனான இந்திரஜித் அறிந்து வைத்திருந்தான். அவர்களை வெல்ல மகாபிரத்தியங்கிராதேவிக்கு யாகம் நடத்த எண்ணினான். அதற்காக அவன் நிகும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக இந்த யாகத்தை நடத்தினான்.
இந்திரஜித்தின் இந்த யாகம் அவனது சித்தப்பாவான விபீஷ்ணனுக்கு தெரியந்தது. அவன் தனது அண்ணன் ராவணனிடம் இருந்து பிரிந்து ராமர்படையில் சேர்ந்திருந்தான். அவன் இந்திரஜித்தின் யாகம் பற்றி ஆஞ்சநேயரிடம் சொன்னான். இந்திரஜித் இந்த யாகத்தை நடத்தி முடித்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என்பது ஆஞ்சநேயருக்கு தெரியும். எனவே அவர் யாகத்தையும் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்தியங்கிரா தேவிக்கு தற்போது கோவில் கட்டப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அவரின் கோபத்தை தணிக்க சிவபெருமாள் சரபேஸ்வரர் உருவம் எடுத்தார். அந்த சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்க முகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள்தான் பிரத்தியங்கரா தேவி. இவள்தான் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கிவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.
இவளது மந்திரத்தை அங்கிரஸ் பிரத்தியங்கரஸ் என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே பிரத்தியங்கிரா என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்தியங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.
மொரட்டாண்டி சித்தர் வாழ்ந்த தலம் இது. இத்தலத்தில் பிரளய விநாயகர், பாதாள பிரத்தியங்கிரா தேவி, துர்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்கரீவர், சண்டிகேஸ்வரர், அஷ்ட திக்கு பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், வாஸ்து பகவான், தன்வந்திரி, பிராம்கி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, உக்ர நரசிம்மர், மகா லட்சுமி, சக்கரத்தாழ்வார், கால பைரவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதி உண்டு.
பூஜைகள்
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்தியங்கிராவுக்கு விருப்பமானவை.
வாழைப்பூ மாலை
நீல நிற ஆடைகள், சர்க்கரைப் பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர் சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்கு வகைகள், உளுத்தம் வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம், சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்தியங்கிராவுக்கு அதிக விருப்பம். அத்துடன் வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை பிரத்தியங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமாகும்.
இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்தியங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் கண்களுக்கு புலப்படாத ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.
இந்த யாகத்தில் பங்கேற்றால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்சனை தீர்த்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப் போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது என்றார்.
நவராத்திரியில் பத்து நாள் உற்சவம், அமாவாசை, பவுர்ணமி, கோகுலாஷ்டமி அன்று காளி பிறந்ததால் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி. பவுர்ணமி தோறும் நவ ஆபரண பூஜை. தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் இரவு பூஜை இங்கு சிறப்பு. காலை 7 முதல் மதியம் 1 மணி, மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரையிலும் அம்மனை தரிசிக்கலாம்.