மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன.
அவற்றில முக்கியமானது அயோத்தி. மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி.
எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியது இருந்தது. ஒரு நாடகம் அரங்கேற கதாபாத்திரங்களை தேர்ந்து எடுப்பார்கள் அல்லவா? அதேபோல் மகாவிஷ்ணு மீண்டும் பூமியில் அவதாரம் எடுக்க தன்னுடன் பயணிக்க சிலரை சகோதரர்களாக தேர்ந்து எடுத்தார். பெரிய பிராட்டியை சீதாதேவியாக ஜனக மன்னனுக்கு மகளாக பிறக்க பணித்தார். தான் துயில் கொள்ளும் பாம்பான ஆதிசேடனை தம்பி இலக்குவனாகவும், சங்கும்&சக்கரமும் பரதனாவும், சத்ருக்கனாவும் பிறக்க வைத்தார்.
அதன்படி அயோத்தில் தசரத மன்னனுக்கு மகனாக ராமபிரான் அவதரித்தார். அவரது தம்பிகளான பரதன், லட்சுமணன், கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர். இதில் கோசலைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்கனும் பிறந்தனர். தனக்கு பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் முடிவு செய்தார். தன் மகன்போல் ராமரை பாவித்து வந்த கைகேயி, கூனியின் துர்உபதேசத்தால் தன் மகனுக்கு பட்டம் சூட்ட நினைத்தாள். ஏற்கனவே தசரதர் தருவதாக கூறிய இரண்டு வரங்களை கைகேயி இப்போது கேட்டாள். அதாவது தன் மகன் பரதன் பட்டம் சூட்ட வேண்டும் என்றும், ராமர் பதினான்கு வருடம் காடு செல்லவேண்டும் எனவும் கூறினாள். தந்தை வாக்கு தவறக்கூடாது என்பதற்காகவும் தன் சிற்றன்னை கைகேயிக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும் ராமர் காட்டுக்கு புறப்பட்டார். அருடன் மனைவி சீதை, தம்பி லட்சுமணன் ஆகியோரும் கானகம் சென்றனர். அண்ணன் வனவாசம் செய்த தகவல் பாட்டனார் வீட்டில் இருந்த பரதனுக்கு தெரியாது. இந்த நிலையில் ராமர் பிரிந்த வேதனையில் தசரதர் உயிர்துறந்தார். அதன்பின்னர்தான் பரதன் சொந்த ஊர் வந்து உண்மையை அறிந்தான். அன்னை செய்த தவறை அறிந்து அவளை திட்டினான். அண்ணனை தேடி காடு சென்றான். ராமரின் அறிவுரைபடி நாட்டை காக்க தயாரானான். ஆனால் அரியணை ஏறாமல் அந்த சிம்மாசனத்தில் ராமரின் காலணியை வைக்க முடிவு செய்தான். அதன்படி ராமரின் காலணியை சிம்மானத்தில் வைத்து அண்ணன் வரும் வரை நாட்டை ஆண்டான்.
இந்த நிலையில்தான் இலங்கை வேந்தன் ராவணன் சீதையை கடத்தினான். அனுமன் உதவியோடு ராமர் சீதையை மீட்டு வந்தார். பின்னர் அயோத்தி வந்து அயோத்தியை ஆண்டார்.
இந்தியா முழுவதும் ராமபிரானுக்கு கோவில்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் ராமருக்கு கோவில்கள் உள்ளன. ஏனெனில் ராமர் வரலாற்றில் தமிழகமும் முக்கிய இடம் வகிக்கிறது.
ராமர் பிறந்ததும் அயோத்தி. அதேபோல் அந்த அவதாரத்தை முடித்துக் கொண்டதும் இதே அயோத்தியில்தான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அயோத்தி ஓர் உன்னதமான புண்ணித்தலமாக விளங்குகிறது.
ராமர் பிறந்த இடமான அயோத்தில் அவர் கோவில் கொண்டுள்ளார். அவருக்கு ராமர், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் வடதிசைநோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் சீதா பிராட்டி. இக்கோவில் விமானத்திற்கு புஷ்கல விமானம் என்று பெயர். இங்குள்ள சரயுநதி, பரமபத புஷ்கரணி ஆகியவை புண்ணிய தீர்த்தங்களாக உள்ளது.
இத்தலத்தின் பெருமைகளை குலசேகர ஆழ்வார் 4 பாடல்களாலும், பெரியாழ்வார் 6 பாடல்களாலும், திருமங்கை ஆழ்வார் ஒரு பாடலாலும் தொண்டரடி பொடியாழ்வார் ஒரு பாடலாலும் புகழ்ந்துள்ளனர்.
இத்தலத்திற்கு செல்ல உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கும் காசிக்கும் இடையே பைசாபாத் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
