Aadi perukku funtion
2/8/2021
பொதுவாக ஆடிபெருக்கு என்பதை ஆற்றிற்கு சென்று வழிபடுவதுதான். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு என்பால் அது பல ஊர்களில் சாத்தியம் அல்ல.மேலும் சென்னைபோன்ற நகரங்களில் அது முடியாத காரியம். அதே போல் ஆறு இல்லாத பகுதியில் வசிப்பர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடலாம்.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.
நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
வீட்டுக் தோட்டங்களிலும் இன்று காய்கறி செடிகளை வளர்க்கலாம்.
ஆடிப் பெருக்கு அன்று மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி வழிபடுவர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒரு இடத்தை தேர்வு செய்து அதை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
சில ஊர்களில் பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்தனார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள். சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் பூஜை செய்வார்கள்.
வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
வீட்டில் எப்படி கொண்டாடுவது?
ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறைவாகும்.
வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்க்கு சந்தனம் குங்குமம் வைத்தும் வழிபடவேண்டும்.