மகாவிஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்தது ஏன்?

ஆலய சிறப்புகள்

Kurma Avatharam/ Kurma nathar temple/ கூர்்ம அவதாரம்/ கூர்ம நாதர் கோவில்

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு காரணத்தி்ற்காக எடுக்கப்பட்டது. அதன்படி இந்த கூர்ம அவதாரத்தை ஏன் மேற்கொண்டார் என்ற புராண வரலாறை காணலாம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி மோதல் உருவாகும். ஒரு முறை ஏற்பட்ட சண்டையில் அசுரர்கள் வெற்றிமுகமாக இருந்தனர். இந்திரலோகத்தையே தங்கள் வசம் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர். அதற்கு துர்வாச முனிவரின் சாபம் ஒரு காரணம். இந்திரன் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் தோல்வியடையும் நிலை உருவானது. இதனர் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர் பாற்கடலை கடைந்து அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் அழிவு கிடையாது என்றார். ஆனால் தேவர்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை தற்காலிக சமரம் செய்து ஏமாற்றறி பாற்கடலை கடைய அழைத்தனர்.

இதையடுத்து தேவர்களுக்கு, மகாவிஷ்ணு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி திருப்பாற்கடலை, மந்தார மலையைக் கொண்டு வாசுகி பாம்பை கயிறாக வைத்து தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தனர். அப்போது மந்தார மலை பூமியில் அமுங்கி சரியத் தொடங்கியது. இதையடுத்து மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மந்தார மலையை தாங்கிக்கொண்டார். பாற்கடலில் இருந்து பல பொருட்களும், அப்ரசஸ்களும், தெய்வ சக்தி பெற்றவர்களும் வெளிப்பட்டனர். இப்படி தேவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை அளிப்பதற்காக எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.
தமிழ்நாட்டில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், தசாவதார சன்னிதியில் கூர்மநாதரும் இடம்பெற்றுள்ளார். அதே போல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் உள்ள தசாவதார சன்னிதியிலும் கூர்மநாதர் அருள்கிறார்.
ஆனால் கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது. இந்த ஆலயத்தில் கூர்மநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம், கூர்மநாயகி என்பதாகும்.
இந்த கோவிலுக்கான வரலாறு வருமாறு:-

ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதன் இவனது மனைவி மகா விஷ்ணு மீது பக்தி கொண்டவள். அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். ‘தான் விரதம் இருப்பது தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே. இவரால் விரதத்திற்கு பங்கம் வந்துவிடுமே’ என்று பயந்தாள். அவள் தன் இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவை நினைத்து வணங்கினாள்.
அப்போது திடீரென தம்பதியர் இடையே ஒரு நதி உருவாகி ஓடியது. அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், “பெருமாளே நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். இதனால் மகாவிஷ்ணு மீண்டும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வந்தார். அப்போது மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, ‘ஸ்வேத புஷ்கரணி’யாக மாறியது. இத்தல இறைவனின் முகத்தில் வெள்ளியால் ஆன திருநாமமும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்கிராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த கோவிலில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது.
இந்தத் திருத்தலம் முன்காலத்தில் ‘கூர்ம லிங்கேஸ்வரம்’, ‘பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ராமானுஜர் தனது திருத்தல விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க நினைத்தார். ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் அமைந்திருந்த கொடிமரம் அருகே சென்றவர், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டார். கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள், அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீகாகுளம் என்னும் ஊர் உள்ளது.. இங்கிருந்து நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.