மகாளய காலம்; வீடுதேடி வரும் மறைந்த முன்னோர்களை பூஜிப்போம்

ஆன்மிக தகவல்கள்

Mhalayam; We will worship the late ancestors who come to the house

அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசியால் நமது வாழ்க்கையும் செம்மை அடையும். அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யலாம்.
தர்ப்பணம் செய்வதற்கோ, மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கோ சிறந்த நாள் மகாளய அமாவாசை. இந்த வழிபாட்டை மகாளய காலம் முழுவதும் நடத்தினால் சிறப்பு.
இந்த வழிபாட்டின் மூலம் மறைந்த நம் முன்னோர்களின் பரிபூரண ஆசிர்வாதத்தை பெறலாம். அவர்களின் அருள் நமக்கு நேரடியாக கிடைக்கும்.
புரட்டாசி மகாளகாலம் என்பது புரட்டாசி அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும். அதாவது முந்தைய பவுணர்மி முதல் புரட்டாசி அமாவாசை வரை உள்ள காலம்தான் மகாளய காலம் என்று பெயர். இந்த காலம் புண்ணியமான காலம்.
மறைந்த முன்னோர்கள் விண்ணில் இறைவன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருப்பார்கள். அவர்கள் இந்த மகாளய காலத்தில் இறைவனின் அனுமதி பெற்று தம் சொந்தங்களை பார்க்க பூமிக்கு வருவார்கள். அவர்கள் சூரியனின் ஒளிக்கற்றை மூலம் பூமிக்கு வருதாக கூறப்படுகிறது-.
மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பெயர். மறைந்த முன்னோர்கள் விண்ணுலகில் இருந்து பெரிய கூட்டமாக பூமிக்கு வரும் நாள்தான் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது.
வீடு தேடி வரும் அவர்களை நாம் நினைத்து பூஜிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும். எனவே அவர்களை வரவேற்கும் வகையில் இந்த மகாளய காலத்தில் நம் வீட்டில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதாவது மகாளய காலம் தொடக்க நாளில் இருந்தே வீட்டை சுத்தம் செய்து புனிதப்படுத்த வேண்டும். தினமும் சாப்பிடும் முன் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வணங்கி சாப்பிட வேண்டும். இப்படி புரட்டாசி அமாவாசை வரை வழிபட வேண்டும்.
இந்த நாட்களில் இறந்தவர்கள் எந்த திதியில் இறந்தார்களோ அந்த நாளில் அவர்கள் எதை எதை வரும்பி சாப்பிட்டார்களே அதை வைத்து வழிபட வேண்டும். அதோடு பால், தயிர், நெய், தேன், பழம் வைத்தும் வணங்க வேண்டும். ஒருவேளை அவர்கள் இறந்த திதி தெரியவில்லை என்றால் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்து வணங்க வேண்டும்.
இப்படி வழிபடும்போது வயதானவர்களுக்கு உணவு அளித்து ஆடை தானம் வழங்கலாம். அதற்கு வசதி இல்லை என்றால் மறைந்த மூதாதையரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
மகாளய காலம் முடிந்ததும் நம் முன்னோர்கள் நம்மை மனதார வாழ்த்திவிட்டு அதே சூரிய கதிர்கள் மூலம் விண்ணுலகம் சென்று விடுவார்கள். அவர்களின் ஆசி நமக்கு கிடைத்துவிடும்.
இந்த வழிபாடு நடத்துவதன் மூலம் வீட்டில் பல்வேறு நன்மைகள் நடக்கும். வீட்டில் இருந்த துர்தேவதைகள் விலகும். வீட்டில் இருந்த குழப்பங்கள் விலகும். அமைதி நிலவும். வீடு மகிழ்ச்சியாக இருக்கும். மங்கல வாழ்வு அமையும்.
சிலருக்கு எதைத் தொட்டாலும் அது அனுகூலமாகாத நிலை இருக்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஒரு காரியத்தில் வெற்றி அடைய முடியாதவர்களாக இருப்பீர்கள். வீட்டில் நிம்மதியற்ற நிலை இருக்கும். இதற்கெல்லாம் காரணம் நாம் மறைந்த முன்னோர்களை மறந்ததுதான் காரணம். அவர்கள் வாழ்க்கையில் முன்னே இந்த மகாளய வழிபாட்டை நடத்தி முன்னேற்றம் காணலாம்.
இந்த மாதம் 21-9-2021 அன்று மகாளயபட்சம் ஆரம்பமாகிறது. 6-10-2021 அன்று மகாளய அமாவாசை. மறைந்த முன்னோர்களின் ஆசியை பெற இந்த நாளை மறக்காதீர்கள்.