What is the meaning of “Kari” Day
காலண்டர் தாளை கிழிக்கும்போது சில நாட்களில் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அன்று சுப காரிங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். வயதான மூதாட்டி என்றெல்லாம் கரிநாள் வரும் என்று மனப்பாடமாக சொல்வார்கள். அதற்கு காரணம் கரிநாள் ஒவ்வொரு மாதமும் குறிப்பட்ட தேதியில் ஆண்டுதோறும் மாறாமல் வரும். அதாவது இந்த ஆண்டு சித்திரை மாதம் 15&ந் தேதி கரிநாள் என்றால் அடுத்த ஆண்டும் இதே நாளில்தான் கரிநாள் வரும்.
கரிநாள் என்றால் என்ன?
இந்த கரிநாள் தென்தமிழகத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் நட்சத்திரம், திதி, கிழமையைக் கொண்டு கணிக்கப்படுவதில்லை. மாறாக மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் வருகிறது.
தென்பகுதியை ஆண்ட மகாராஜாக்கள் மற்றும் மகான்கள் இறந்த நாள் அல்லது சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பலர் இறந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்த நாட்களை கரிநாள் என்று குறித்து வைத்தார்கள். இந்த துயரங்கள் நடந்த நாளில் மக்கள் எந்த சுபங்களையும் நடத்த மாட்டார்கள். அதேபோல் அதி வெப்பம் நிறைந்த நாளையும் கரிநாளாக குறித்து வைத்துள்ளனர். தெய்வத்துக்குரிய நாளில் சுப காரியங்களை செய்ய மாட்டார்கள் அல்லவா? அந்த நாளையும் கரிநாள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இன்று (சித்திரை 15-ந் தேதி) சூரியன் மேஷ ராசியில் இருக்கிறார். அவர் மேஷ ராசிக்கு மாரகாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரமான பரணி 1-ம் பாதத்தில் செல்கிறார். இதனால் இன்று கரிநாள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாதமும் கரிநாள் என்று வரும் என்பதை கீழே காணலாம்.
சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19.