ஹோமம் நடத்துவது உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்லது. யாககுண்டத்தில் இருந்த வரும் மூலிகை மணம் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். நல்ல எண்ணத்துடன் நடத்தும் எந்த யாகமும் நமக்கு மிகுந்த நன்மையையே தரும்.
யாகங்கள் பல்வேறு தெய்வங் &களை குறித்து நடத்தப்படுகின்றன. அதில் முதன்மையானது விநாயகருக்காக நடத்தப்படும் யாகம். கணபதி ஹோமம் என்று அழைக்கப்படும் இந்த யாகத்தை செய்து எந்தஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும்.
கணபதி ஹோமத்தை அதிகாலை வேளையில் அதாவது பிரம்ம மூகூர்த்தத்தில் நடத்த வேண்டும். மேலும் பவுணர்மி, மாதப்பிறப்பு, சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் நடத்துவது மிகச்சிறப்பு.
யாகத்தில் மூலிகை சுள்ளிகளை போட்டு நெருப்பை வளர்ப்பார்கள். மேலும் யாகத்தீயில் பல்வேறு பொருட்களை போடுவார்கள். இதில் போடுப்படும் பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன்களும் கிடைக்கும்.
யாகத்தீயில் தேன், பால், நெய் கலவையை விட்டால் அரசின் உயர் பதவி கிடைக்கும். நெல்பொரி, திரிமதுரம் போட்டால் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். தேனால் யாகம் நடத்தினால் கடன் தொல்லை நீங்கி, செல்வம் பெருகும்.
யாகத்தீயில் கொளுக்கட்டை போட்டால் எடுத்த காரியம் வெற்றிபெறும். கரும்பு துண்டுகளை யாகத்தில் போட்டால் பொருளாதார வளம் பெருகும்.
தேங்காய் துண்டு, நெய், சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுஉருண்டை, நெல்பொரி, அவல், வாழைப்பழம், வில்வமரக்குச்சி, அருகம்புல், பொங்கல் ஆகியவற்றை யாகத்தில் போட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
கருங்காலி குச்சியால் யாகம் நடத்தியால் வறுமையில் வாடுபவர்கள் அதில் இருந்து விடுபடுவர். கடன் தொல்லையும் அகலும்.
பொதுவான பிரச்சினைகளுக்கும் இந்த கணபதி ஹோமத்தை நடத்தலாம். மழை பெய்ய நீர் நொச்சியால் யாகம் நடத்த வேண்டும். மழை அதிகமாக பெய்து வெள்ளத்தால் ஆபத்து நேரும் சூழ்நிலை ஏற்பட்டால் யாகத்தில் உப்பு போட்டால் வெள்ளம் கட்டுப்படும்.
யாகம் நடத்த முடியாதவர்கள் கணபதி ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று அதில் கலந்து கொண்டாலும் பலன்கள் கிடைக்கும். அங்கு சென்று யாகத்திற்கு தேவையான பொருட்களை கொடுத்தாலும் நன்மை கிடைக்கும்.
அந்த வகையில் யாகத்திற்காக அருகம்புல் கொடுத்தால் நீண்ட ஆயுளை பெறலாம். மா, பாலா, வாழைப்பழங்களை கொடுத்தால் திருமணத்தடை நீங்கும். பால் கொடுத்தால் கால்நடைகள் பெருகும். தயிர் கொடுத்தால் நல்ல வாழ்க்கையும், நெய் கொடுத்தால் லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். எள் காலந்த அரிசி கொடுத்தால் கடன் நீங்கும். தேனுக்கு தங்க நகைகளும், சர்க்கரைக்கு புகழும், அரளிக்குஆடைகளும், தாமரைக்கு சொந்த வீடும், அரசசமித்தால் அரசியல் செல்வாக்கும் கிடைக்கும்.
– ஆ.பாலன்
