பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சீபுரம் எண்ணற்ற கோவில்களை உள்ளடக்கிய நகரம். சைவம் மற்றும் வைணவக்கோவில்கள் இங்கு பல உள்ளன. இந்த ஊரில் உள்ள முக்கிய கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. சோழர்கள் ஆட்சியில் 1018&1053 ஆண்டு காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள மூலவர் தேவராஜ பெருமாள். இவரை வரதராஜ பெருமாள் என்றும் அழைப்பர்.
இந்த கோவிலில்தான் தண்ணீருக்குள் அத்தி வரதர் நித்திரை கொண்டு இருப்பார். அத்திமரத்தால் செய்த வரதராஜர்(மகாவிஷ்ணு) எப்போதும் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நீரினுள் இருப்பார். அந்த பெருமாளை ஒரு பெரிய வெள்ளிப் பேழையில் வைத்து தண்ணீருக்குள் வைத்திருப்பார்கள். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதரை வெளியே எடுத்து 48 நாட்கள் பூஜிப்பார்கள். பிறகு மீண்டும் தண்ணீருக்குள் வைத்துவிடுவார்கள்.
இந்த ஆண்டு கடந்த ஜூலை 1&ந் தேதி அத்திவரதர் வெளியே எடுத்துவரப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு வைத்துள்ளனர். இவர் 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதில் 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த கோவில் பல்வேறு புராண சிறப்புகளை கொண்டது. ஆதியில் அத்திமரக்காடாக இந்த இடம் இருந்துள்ளது. மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மா படைக்கும் தொழிலை மேற்கொள்ள இங்கு மகாவிஷ்ணுவை நோக்கி யாகம் நடத்தினார்.
இந்த யாகத்தில் பிரம்மா தனது மனைவியான சரஸ்வதியை அழைக்காமல் காயத்திரி, சாவித்திரி என இருவரை அழைத்து யாகத்தை ஆரம்பத்தினார். இதனை அறிந்த சரஸ்வதி கோபம் அடைந்தாள். அவள் வேகவதி என்னும் நதியாக தோன்றி அந்த யாகம் நடத்தும் இத்தை நோக்கி ஆக்கிரோஷமாக பாய்ந்து வந்தாள்.
அப்போது யாகத் தீயில் இருந்து மகாவிஷ்ணு தோன்றி நதியின் குறுக்கே படுத்துக் கொண்டு யாகத்தை நடத்த வழிவகை செய்தார். வேகவதி தனது போக்கை சற்று மாற்றிக் கொண்டது.
யாகத்தின் முடிவில் ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் பிரம்மாவுக்கும் தேவர்களுக்கும் சங்கு சக்கரத்துடன் மகாவிஷ்ணு காட்சி கொடுத்தார்.
மகாவிஷ்ணு கேட்டவர்களுக்கு பல்வேறு வரங்களை அருளினார். இப்படி வரங்களை அள்ளி அள்ளி கொடுத்ததால் அவர் வரதராஜன் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் மகாவிஷ்ணு காட்சி கொடுத்த கோலத்தை சிலையாக வடிக்கும்படி விஸ்வகர்மாவுக்கு பிரம்மா உத்தரவிட்டார். அவரும் அத்தி மரத்தில் அந்த சிலையை வடிவமைத்தார். அந்த சிலையை மூலவராக கொண்டு அங்கு கோவில் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் பின்னொரு காலத்தில் மீண்டும் பிரம்மா அங்கு யாகம் நடத்தியபோது அந்த அத்தி வரதர் சிலை லேசாக தீயில் கருதி சேதம் அடைந்தது. இதனால் பிரம்மா மன வருத்தம் அடைந்தார். அப்போது மகாவிஷ்ணு அசரீரியாக தோன்றி உஷ்ணமாக இருக்கும் தன்னை ஆனந்தசரஸ் தெப்பக்குளத்தில் போட்டு வைக்குமாறும். நாற்பது ஆண்டுக்கு ஒருமுறை தன்னை வெளியே எடுத்து வணங்குமாறு கூறினார்.
அதன்படி அந்த அத்தி வரதர் தண்ணீருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. மூலவர் இல்லாத கோவிலாக இருப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அப்போது பெருமாள் அசரீரியாக காஞ்சீபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய சீவரம் கோவிலில் இருந்து பெருமாள் சிலையை எடுத்து வந்து வைக்கும்படி கூறினாராம். அதன்படி அங்குள்ள தேவராஜ பெருமாள்(மகாவிஷ்ணு) சிலையை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். இப்போது ஆண்டு தோறும் தை மாதம் ஒருநாள் தேவராஜபெருமாள் காஞ்சீபுரத்தில் இருந்து பழைய சீவரம் சென்று வருகிறார்.
இப்படி புராண வரலாறு கூறினாலும் ஒரு காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் சிலையை பாதுகாக்க தெப்பக்குளத்திற்குள் போட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவில்கள் சூறையாடப்பட்டன. அதற்கு பயந்து இந்த வரதராஜ பெருமாளை உடையார் பாளையத்தில் மறைத்து வைத்தனர். 1688&ம் ஆண்டு முதல் 1710 &ம் ஆண்டு வரை அங்கு இருந்ததாக வரலாறு கூறுகிறது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றப்படுகிறது. இந்த பெருமாள் மீது ராபர்ட் கிளைவ் மிகுந்த பக்தி கொண்டவர். அவர் அணிகலன் ஒன்று காணிக்கையாக செலுத்தினார். அது கருடசேவையின் போது பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.
தெப்பக்குளத்தில் இருக்கும் அத்தி வரதர் இதற்கு முன்பு 1854, 1892, 1937, 1979&ம் ஆண்டுகளில் வெளியே காட்சி தந்தார். அதன்பின் இந்த ஆண்டு காட்சி கொடுகிறார். அவரை தரிசிக்க பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.