வேலைக்கார மாமனார்
“என்னங்க… சீக்கிரம் கிளம்புங்க…”
கேட்டுக்கொண்டே கமலா கணவரின் மோட்டார் சைக்கிள் இருக்கும் இடத்தைநோக்கி நடந்தாள். அவளின் வலது உள்ளங்கையை பெரிய மணிபர்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள இரண்டு விரல்கள் சேலையின் முந்தானையை கவ்விக் கொண்டிருந்தது. அவளின் பின்புற ஜாக்கெட் அழகை அவளது பரந்து விரிந்த கூந்தல் முழுமையாக மறைத்து இருந்தது. கூந்தலின் முனையில் சிறு முடிச்சு, அந்த முடிச்சை ஒருசில மல்லிகை மலர்கள் அலங்கரித்து சிரித்தன.
“இதோ வந்துட்டேன்…” அவசரம் அவசரமாக தலையை துவட்டியபடி சங்கர் மின்னல் வேகத்தில் பேண்டை எடுத்தான்.. அடுத்த நொடியில் பேண்டை புறக்கணித்துவிட்டு வேட்டியை எடுத்தான்.
“பொண்ணுங்கத்தான் புறப்பட லேட்டாகும்மாங்க… இங்கே என்னடான்னா ஆம்ளைக்கு இவ்வளவு நேரம்.”
“வந்துட்டேன்…”
“எம்மா… காலையில குடிக்கிறது காபி தரலியே..” இது மாமனார் குரல்.
“அதை அடுப்பு அருகே சொம்புலே ஊத்தி வச்சிருக்கேன் எடுத்து குடியுங்க..” வெளியில் நின்றபடி கத்தினாள் கமலா.
“ஏண்டி அந்த காபிய எங்க அப்பா கிட்ட கொண்டுபோய் கொடுத்துட்டு வரவேண்டியதுதானே…”
“இடது கண் புருவத்தை உயர்த்தி கமலா பார்த்த ஒரு பார்வை சங்கரை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தது.
மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய, கமலா ஒருபக்கமாக வண்டியின் பின்புறம் ஏறினாள். இதுவரை வேலை செய்யாமல் இருந்த அவளது இடது கை சங்கரின் தோள்பட்டையை பற்றிக் கொண்டது. அதில் ஆபாசம் இல்லை. அன்பின் இணக்கம். தன் மீது வைத்துள்ள பாசத்தில் சிறிதளவாவது தன் தந்தை மீது வைத்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் சங்கருக்கு.
மோட்டார் சைக்கிளில் நகரத்தை தாண்டி ஆள்அரவமற்ற பகுதியில் பயணித்தது. அதன்பின் புதிதாக உருவான குடியிருப்புகள், அதனை அடுத்து பாழடைந்த நிலையில் கவனிப்பாரற்று இருக்கும் கோவில்.
அங்கு முருகப்பெருமான் தனது இருமனைவியுடன் அங்கு தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார். பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்படா விட்டாலும் தம்பியின் இல்லற வாழ்க்கையை அண்ணன்(விநாயகர்) வெளியில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தார்.
மற்ற கோவில்கள் போல முறைப்படி பூஜைகள் எல்லாம் அந்த கோவிலில் நடக்காது. நெடுந்தூரம் உள்ள கோவிலுக்கு விரதம் இருந்து பணம் செலவு செய்து போவார்கள். ஆனால் அருகில் உள்ள கோவிலை யாரும் கண்டு கொள்வதில்லை. அது என்ன… கோவிலுக்கும் கிரகம் வேலை செய்யுமோ? சில காலம் சில கோவில்கள் புகழின் உச்சிக்கு செல்கிறது. சில காலம் கேட்பாரற்று கிடக்கிறது. அப்படித்தானோ இந்த முருகன் கோவிலும்?
அந்த கோவிலை நோக்கித்தான் சங்கரின் மோட்டார் சைக்கிள் சென்றது. தேவையான வசதிகள் இருந்தும் குடுபத்தில் ஒரே குழப்பம். நிம்மதி இல்லை. “உங்கள் வாழ்க்கை வழிகாட்டி” ஆன்மிக பத்திரிகையில் சிவா சாமியார் எழுதிய கட்டுரையை படித்துதான் கமலா தனது கணவரை இந்த கோவிலுக்கு அழைத்து வந்தார். கேட்பாரற்று இருக்கும் கோவிலை சுத்தம் செய்து விளக்கு ஏற்றினால் குடும்ப பிரச்சினை மறையும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் அந்த கோவிலுக்கு வந்துள்ளனர்.
“மாமனாரு… அந்த கிளம் நம்மள என்னா பாடுபடுத்துது. துப்புன இடத்துக்கு மண்ணக்கூட அள்ளி போடாத அவருக்கு நாமதான் எல்லா செய்யணும். கட்டிய புருசனுக்கு செஞ்சா பராவாயில்லை. இந்த கிழடுக்கும் அவிச்சு கொட்ட வேண்டியதிருக்கே.. எப்பதான் செத்து தொலையுமோ… இந்த முருகன் கோவிலுக்கு வந்தாலாவது நமக்கு விமோசனம் பிறக்குமா? அப்பா முருகா..”&இது கமலாவின் உள்ளம்.
“பாவம் எங்கப்பா…. வயசால காலத்திலே அவருக்கு நேரத்துக்கு சோறு கொடுக்கமாட்டேங்கிறா? அவரு துணிமணிகளை நல்லா துவைச்சு கொடுக்க மாட்டேங்கிறா… குளிக்க சுடுதண்ணி போட்டு கொடுக்கறதே இல்லை.. இதெல்லாம் கேட்டா கத்துறா… வீட்டில் ஓரே போர்க்களம். எப்படியோ இந்த கோவிலுக்கு வந்த பிறகாவது குழப்பம் தீர்ந்தா நல்லதுதான்.”& இது சங்கரின் மனக்குமுறல்.
கோவிலில் பழைய கதவில் பெயரளவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
“இன்னும் பூசாரியை காணலியே…?” கமலா கேட்டாள்.
“அவருக்கிட்ட தகவலை சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவாரு…”
“ஒரே வெயிலா இருக்கு அந்த வேப்பமரத்து நிழல்ல நிப்போம்.”
&வந்தார்கள் நிழலைத் தேடி…
எதிரே புதிதாக கட்டப்பட்ட பெரிய வீடு, ஆங்காங்கே புதிதாக வைக்கப்பட்ட செடி&கொடிகள் முதல் மலர்களை பெருமையுடன் மலரச் செய்து கொண்டிருந்தன. வரண்டாவின் ஒரு மூலையில் பழைய கட்டிலில் முடங்கி கிடந்தார் முதியவர்.
“தாத்தா இன்னாங்க காபி”
& தூங்கி விழித்தாலும் தூக்கம் கலையாத அந்த சிறுமி இரண்டு கைகளாலும் ஒரு குவளையை எடுத்து வந்தாள். குழந்தையின் குரலை கேட்ட முதியவர் படப்படப்புடன் எழுந்து நடுநடுங்கிய தனது இரண்டு கைகளாலும் அதனை பெற்று கொண்டார். அதை வாங்கி மடக்மடக்கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.
சூடு உள்ளுக்குள் இறங்கியதும் உடல் முறுக்கேறியது. இரண்டு கைகளையும் தூக்கி சோம்பலை முறித்துக் கொண்டார்.
“இதனை பார்த்துக் கொண்டிருந்த கமலா, “பார்த்தீங்களா நான் நம்ம பிள்ளைக்கிட்ட காபி கொடுத்தனுப்பினா கோபப்படுறீங்க.. இங்க பாருங்க… நானாவது ஒங்க அப்பாவ வீட்டுக்குள்ள நல்ல அறையில.. நல்ல கட்டிலில படுக்க வைச்சிறுக்கேன்…இந்த வீட்டு மகாராணி வெளிவாராண்டாவில படுக்க வச்சிருக்கா… அதுவும் பழைய கட்டிலிலே.. இனிமே என்னை குறை சொல்லாதீங்க…”
தனது மனைவி கமலா அவளோட அப்பா&அம்மாவுக்கு கொடுக்கிற மரியாதையை தன் அப்பாவுக்கு கொடுக்காட்டியும் இதைவிட பரவாயில்ல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான், சங்கர்.
அடுத்த நொடியில் எதிர்வீட்டு மகாராணி வராண்டாவுக்கு வந்தாள்.
“என்ன எழுந்திருக்க லேட்டாயிட்டு.. சரி.. கரண்ட் போயிடும்.. அதுக்குள்ள மோட்டாரை போட்டு செடிகளுக்கு தண்ணீ விடுங்க…”
&உத்தரவு போட்டாள் அவள்.
அந்த உத்தரவுக்கு “சரிம்மா…” என்றதோடு பதிலேதும் பேசாமல் படப்படப்புடன் எழுந்து வேலைக்கு தயரானார். கீழே கிடக்கும் பழைய இலை குப்பைகளை அள்ளி குப்பைகூடையில் போட்டார். பின்னர் மோட்டாரை போட்டு டியூப் மூலம் செயற்கை மழையால் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர்.
அப்போது முதியவரின் கண்ணில் இந்த தம்பதியர் பட்டுவிட்டார்.
“என்ன.. ஊருக்கு புதுசா, யாரு வீட்டை தேடறீங்க?”
“இல்லை, முருகன் கோவிலுக்கு வந்தோம்.”
“பூசாரி எப்போதாவதுதான் வருவார்.”
“இல்லைய்யா அவருக்கு சொல்லி அனுப்பிடோம்.”
இந்த நேரத்தில் அந்த வீட்டு மகராணி மீண்டும் அங்கு தட்டுடன் வந்தார். “இந்தாங்க டிபன்… நேரத்துக்கு சாப்பிடுங்க.. இன்னிக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு..”
முதியவர் ஓடி வந்து தனக்கென்று உரிய ஒரு தட்டியில் இட்லி வகையறாக்களை வாங்கி வைத்துக் கொண்டார். சட்டினி&சாம்பாரின் வாசனை வெளியே நின்ற கமலாவின் நாசிக்குள்ளும் புகுந்தது.
அந்த நேரத்தில் சிறுமி, குளித்த கிராப் தலைமுடி பஞ்சாய் பறந்தபடி ஓடிவந்தாள்.
“நானும் தாத்தாகூட சாப்பிட போறேன்.” அந்த பிஞ்சு வாயில் இருந்து வந்த வார்த்தைக்கு பொருமித் தள்ளினாள் அந்த மகாராணி..
“ஏய் உள்ளேபோ…” என்று கத்தினாள்.
வெளியே..
கமலா, “பாத்தீங்களா அந்த வீட்டு பெரியவருக்கு தனி தட்டு, பிள்ளைக்கு தொற்று நோய் வந்துடக்கூடாதுன்னு அண்ட விடமாட்டேங்கிறா…. உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு பெண்டாட்டி வாச்சிருந்தா தெரியும்.”
கணவருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.
“கமலா உண்மையிலேயே மத்தவங்கள பார்க்கும்போது நீ எவ்வளவோ உசத்திதான். எங்க அப்பாவுக்காக உன்னை திட்டினதை மனசுல வச்சிக்காதே..”
&இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே பூசாரி வந்துவிட்டார்.
“என்ன அப்பவே வந்து காத்திருங்கீங்களா?”
“அதுகென்ன.. கோவிலுக்கு போகலாமா?”
அடுத்த சில நொடிகளில் கோவிலை அடைந்தார்கள்.
பூட்டை திறந்து பாதுகாப்பாக சன்னதியில் உள்ள ஒரு திண்டில் வைத்தார், பூசாரி. விளக்குமாறை எடுத்து சுத்தம் செய்ய முயன்ற அவரை தடுத்து கொடுங்கய்யா நான் பெருக்கிறேன் என்று வலுக்கட்டாயமான விளக்குமாறை எடுத்து சுத்தம் செய்தான் சங்கர்.
பூஜைக்கு ஏற்பாடாயிற்று. கமலா ஓர் அகல் விளக்கை ஏற்றினாள். முருகப்பெருமான் வள்ளி&தெய்வானையுடன் மலங்கல முகத்துடன் அழகுடன் காட்சி அருளிதார்.
பூஜை முடிந்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டு கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கி புறப்பட்டார்.
அந்த பெரிய வீட்டை தாண்டும்போது முதியவரை காணவில்லை.
“என்னங்கள் பெரியவரை காணலியே?”
“அதோ முன்னாடி நடந்து போய்கிட்டிருக்கிறாரே..”
கணவரின் தோள்படைக்கு மேலே முகத்தை நீட்டி எட்டிப்பார்த்தாள், கமலா.
பாவம் அந்த முதியவர் துணி பொட்டலங்களை இடுப்பில் வைத்தபடி தென்னி தென்னி நடந்து கொண்டிருந்தார்.
“கொஞ்சம் வண்டிய நிறுதுங்க” என்று கணவரிடம் சொல்லி வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அந்த முதியவரிடம் “அய்யா எங்க போறீங்க..” என்று கேட்டாள் கமலா.
“துணியை இஸ்திரிக்கு கொடுக்க போறேம்மா.. அப்படியே கடைக்கு போய் காய்கறி சமான்களும் வாங்கிட்டு வரணும்.”
“என்னயா உங்க மருமக குணம் சரியில்லையோ?”
&கணவரை ஓரக்கண்ணால் பார்த்தபடி அந்த முதியவரிடம் கமலா கேட்ட கேள்விதான் இது.
“எப்படிம்மான தெரியும்…” பெரும் மூச்சு விட்டார் முதியவர்.
“நான் கொடுத்து வச்சது அவ்வளவுதாம்மா… எம் மகன் அவ முந்தானையிலே சுகத்ததை கண்டுட்டான். அவா அடுத்த வீட்டு பொண்ணு…. அப்படி&இப்படிததான் இருப்பா, ஆனா என் மகனும் என்ன மதிக்கிறது இல்லம்மா…”
“என்ன அய்யா.. இவ்வளவு வசதியா பெரிய வீட்டுல இருக்கிறாங்க-… என்னதான் இருந்தாலும் பெத்த அப்பாவை இப்படியா வெளியே படுக்கச் சொல்லறது? அப்பப்பா? நானெல்லாம் என் மாமனாருக்கு வேண்டியதை கொடுத்து நல்லா மரியாதையோட நடத்துறேன்.”
“என்னம்மா சொல்றீங்க…”
“இல்லையா… உங்கள இப்படி வேலை வாங்குறாளே… அந்த மகாராணி.. அதான் உங்க மருமக… அவளைத்தான் சொல்றேன்.”
“தப்பு.. தப்பு அப்படி சொல்லாதீங்ம்மா… அது என் மருமக இல்லை. எங்க வீட்டு முதலாளியம்மா. அங்க நாள் வேலை செய்யறேன். ஒருநாள் என் மருமகள் எனக்கு சாப்பாடு தரல.. அதனால் ரோட்டில மயங்கி விழுந்திட்டேன். அப்போ அந்த வழியா இந்த வீட்டு அம்மாதான் கடையிலே சோடா வாங்கி முகத்துல தெளிச்சி என்ன காப்பதினாங்க.. அதுக்கப்புறம் என் நிலைய அறிஞ்சி என்ன வீட்டு வேலைக்கு வச்சிக்கிடாங்க. அந்த வீட்டுல என்ன நல்லபடியா வச்சிருக்காம்மா. அவங்கள ஒண்ணும் சொல்லிடாதீங்க.”
என்று விளக்கம் அளித்துவிட்டு கமலாவின் பதிலுக்கு காத்திராமல் நடையை கட்டினார், முதியவர்.
முதியரின் பேச்சை கேட்டதும் மனதுக்குள் வெட்கி தலை குனிந்தாள் கமலா.
“என்னடி பேச்சு மூச்ச காணோம்.”& சங்கர் கேலியான கேள்வி இது.
“சாரி பெரியவரே நான் உங்களையும் அந்த வீட்டுக்கார அம்மாவையும் தப்பா நினைச்சிட்டேன்..”
“அடியே கமலா அவரு அப்பவே இந்த இடத்தை விட்டு போயிட்டாரு.”
“ஓ…”
மவுனியாக மோட்டார் சைக்கிளில் ஏறி.. ரைட் போகலாம் என்று சொல்வதற்கு அடையாளமாக தோளை கைகளால் இறுக்கினாள்.
“ச்ச ஒரு வேலைக்காரருக்கே இந்த உபசரணையா? இனிமே நாமும் மாமானருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டியதுதான்…”
அவளின் முடிவு வீட்டில் நிலவிய குழப்பத்துக்கு கண்டிப்பாக முடிவு கட்டிவிடும். இப்போதே அந்த கோவிலுக்கு சென்று வழிபட்ட பலனை அடைய தொடங்கிவிட்டார்கள் அந்த தம்பதியர்.
&&&&&&&&&&&&&&&&&&